india

img

கொரோனா மரணங்களை மறைத்த ம.பி. பாஜக அரசு.... ஏப்ரல் - மே மாதத்தில் சராசரியைக் காட்டிலும் 290 சதவிகிதம் அதிகரித்த உயிரிழப்புகள்....

போபால்:
இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ‘தி எக்கனாமிஸ்ட்’ (The Economist) அண்மையில் செய்திக் கட்டுரை வெளியிட்டு இருந்தது. கிறிஸ்தபர் லாப்லர் என்பவர் விஜினியா காமென்வெல் பல்கலையில் சமர்ப்பித்த ஆய்வையொட்டி எழுதப் பட்டிருந்த அந்த கட்டுரையில், இந்தியாவில் அரசு வெளியிட்டு இருக்கும்அதிகாரப்பூர்வ மரண எண்ணிக்கையை விட உண்மையான பலி எண்ணிக்கை ஐந்து முதல் 7 மடங்கு அதிகம் இருக்கும் என்று ‘தி எக்கனாமிஸ்ட்’ தெரிவித்து இருந்தது.

இந்தியாவில் கடந்த வியாழக்கிழமையன்று (ஜூன் 10)ஒட்டுமொத்தமாக 6 ஆயிரத்து 148 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதுநாள் வரைபதிவான மரண எண்ணிக்கையிலேயே இதுதான் அதிகபட்சம் என்பதால் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பின்னர்தான் பீகார் மாநிலத்தில் விடுபட்ட கொரோனா மரணங்களை, ஒரே நாளில் மொத்தமாக சேர்த்து கணக்கிட்டதால், எண்ணிக்கை அதிகமானது தெரியவந்தது. அதாவது, பீகாரில் மொத்தமே 5 ஆயிரத்து 500 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர் என்று முன்புகணக்கு காட்டப்பட்டு இருந்தது. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து, 4 ஆயிரம் மரணங்கள் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. அது ஜூன் 10 அன்று பழைய கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால், பீகாரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 451 ஆக உயர்ந்ததுடன், அகிலஇந்திய அளவிலான எண்ணிக்கையிலும் அது உயர்வை ஏற்படுத்தியது. 

ஆனால், இது புதிய கேள்வியை எழுப்பியது. பீகார் என்ற ஒருமாநிலத்தில் மட்டும் 4 ஆயிரம் கொரோனா மரணங்கள் மறைக்கப் பட்டிருக்கிறது என்றால், நாடு முழுவதும் எத்தனை ஆயிரம் மரணங்கள்மறைக்கப்பட்டிருக்கும்? என்று யோசிக்க வைத்தது. ‘தி எக்கனாமிஸ்ட்’ செய்திக் கட்டுரைக்கு, வலு சேர்ப்பதாகவும் இது இருந்தது.ஆனால், ‘தி எக்கனாமிஸ்ட்’ ஏட் டின் செய்திக்கு, அதன் பெயரைக் குறிப்பிடாமல் ஒன்றிய பாஜக அரசு மறுப்பு தெரிவித்தது. “இது ஆதாரப்பூர்வமற்ற செய்தி. முழுக்க முழுக்க யூகங்களின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதிஉள்ளனர். நிரூபிக்கப்படாத ஆராய்ச்சிகளை மேற்கோள்காட்டி, எந்த விதமான பெருந்தொற்று ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் இந்த கட்டுரையை எழுதி உள்ளனர்.ஐசிஎம்ஆர் வழங்கி இருக்கும் கட்டுப்பாட்டு முறைகள் மூலமே மாநிலங்கள் கொரோனா மரணங்களை மாவட்ட வாரியாக பெற்று, அதை அனுப்புகின்றன. மாநிலங்களின் கொரோனா மரணம் ஒன்றாக சேர்த்துதேசிய அளவில் அறிவிக்கப்படுகின்றன. இதில் குறைவாக, அதிகமாகமரணங்களை குறிப்பிட முடியாது” என்று ஒன்றிய அரசு பதிலில் குறிப் பிட்டிருந்தது.

இந்நிலையில்தான், பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்திலும், பல்லாயிரக்கணக்கான கொரோனாமரணங்களை மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.2021 ஏப்ரல்- மே மாதங்களில் வெறும் 4,100 பேர்தான் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று மத்தியப்பிரதேச அரசு கணக்குக் காட்டியுள்ள நிலையில், உண்மையில் லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றுதகவல் அறியும் உரிமைச் சட்ட புள்ளிவிவரங்கள் மூலம் பத்திரிகையாளர் ருக்மிணி பரபரப்பு கிளப்பியுள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் 2018, 2019-ம் ஆண்டுகளில் கொரோனா பாதிப்புக்கு முன்னர் ஏப்ரல் - மே மாதங்களில் சராசரியாக 59 ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு தொடங்கிய 2020, 2021-ஆம் ஆண்டுகளின் ஏப்ரல் - மே மாதங்களில் சராசரியாக 2.3 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனாவுக்கு முந்தைய காலங்களை ஒப்பிடுகையில் சுமார்290 சதவிகிதம் (3 மடங்கு) என்ற அளவில் கூடுதலாக 1 லட்சத்து 70 ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவை தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுபட்ட கொரோனா உயிரிழப்புகளை அந்த மாநில அரசும் தற்போது புதுப்பித்து வருகிறது. புதிய கணக்கீட்டில்,விடுபட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 800 முதல் 1லட்சத்து 8 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;